பாரிய வெடிவிபத்து : 102 பேர் பலி, 135 பேர் படுகாயம்!


ரஷ்யாவின் பெர்ம் நகரின் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் 102 பேர் உயிரிழந்தனர். 135 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 85 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கேளிக்கை விடுதியின் 8ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிப்பொருட்களைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்காததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

பால்மாவில் கலப்படம் : இருவருக்கு மரண தண்டனை

சீனாவில் 6 குழந்தைகள் உயிரிழந்து முன்னூறுக்கும் அதிகமான குழந்தைகள் சுகவீனமடையக் காரணமான பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவருக்கு சீனா மரணதண்டனை விதித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தவருக்கு நஞ்சான உணவைத் தயாரித்து விற்றதற்காக தண்டனை வழங்கப்பட்டது.

மொத்தமாக 21 பேருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, இந்த வருட முற்பகுதியில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

தீ விபத்து : இராணுவ உயர் அதிகாரிகள் பலர் பதவி இழப்பு

ரஷ்யாவில் உலியனோஸ் வக் பகுதியிலுள்ள வோல்கா நகரில் இராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. கடந்த 13ஆந்திகதி அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில், இராணுவத் தளவாடங்கள், வெடிபொருட்கள் எரிந்து நாசமாயின, தீயை அணைக்கச் சென்ற 2 வீரர்கள் உடல் கருகினர். மேலும் அங்கு பணிபுரிந்த 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதற்குப் பாதுகாப்பு (இராணுவ) அமைச்சகத்தின் கவனக்குறைவும், அலட்சியமும்தான் காரணம் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் மற்றும் பல உயர் அதிகாரிகளை அதிபர் மெத்வதேவ் பதவி விலக்க உத்தரவிட்டுள்ளார்.

ஈராக்கில் 'சதாம் உசேன் டிவி' ஆரம்பம்

சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி. சேனல் தொடங்கியிருக்கலாம் என ஈராக் அரசு தெரிவித்துள்ளது. ஈராக்கில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நடந்தது. விடுமுறையில் மக்கள் பொழுதை களித்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அங்குள்ள டி.வி. ஒன்றில் தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேன் திடீரென தோன்றினார்.

தோன்றியது மட்டுமின்றி ஈராக் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தூக்கிலிடப்பட்ட 3ஆவது ஆண்டு நினைவு நாளன்று அவர் ஆற்றிய உரைகளை அந்த டி.வி. ஒளிபரப்பியது.

இது ஈராக் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உரையை டி.வியில் ஒளிபரப்பியது யார் என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது.

சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி. சேனல் தொடங்கியிருக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தனது ஆட்சிக்காலத்தின்போது சதாம் உசேன் 'பாத்' என்ற பெயரில் கட்சி தொடங்கியிருந்தார். அந்த கட்சியினர் புதிய டி.வி.யை தொடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

சிரியா நாட்டில் உள்ள மாஸ்கஸ் நகரைச் சேர்ந்த முகமது ஜர்போயா என்பவர் இந்த டி.வி.யின் தலைவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் சதாம் உசேன் இராணுவ உடையிலும், சூட்- கோட் உடையிலும் தோன்றிய புகைப்படங்களும், அவர் வெள்ளை குதிரையில் கம்பீரமாக வந்த காட்சியும் அடிக்கடி அன்றைய தினம் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிகரெட்டால் பாதிக்கப்பட்டவருக்கு 800 மில்லியன் டொலர் நஷ்டஈடு

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தஞ்சமடைந்திருக்கும் முன்னாள் புகை மன்னர் (61 வயது) ஒருவருக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக வழங்க அமெரிக்க சிகரெட் உற்பத்தி நிறுவனமான பிலிப் மொஸுக்கு புளோரிடா மாநில நீதிமன்றமொன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நஷ்ட ஈடாக 244 மில்லியன் அமெரிக்க டொலரையும் கடந்த கால மற்றும் எதிர்கால மருத்துவ செலவுகளுக்காக 56.6 மில்லியன் அமெரிக்க டொலரையும் வழங்க மேற்படி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

கேசச் சாயத்தால் குரூரமாகிய பெண்ணின் முகம்

தலைக் கேசச் சாயத்தால் ஏற்பட்ட ஒவ்வாமையால் யுவதியொருவரின் முகம் வீங்கி குரூரமடைந்த சம்பவம் தென் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

அபிகெயில் கொல்போர்ன் என்ற மேற்படி 15 வயது யுவதி, தனது பிறவுண் நிற கேசத்தை கருமையாக்க கேசச்சாயத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர் தலை வீங்கி கண் இமைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள வேற்றுக் கிரகவாசி போன்று மாறினார்.

இது தொடர்பில் அபிகெயிலின் தாய் விபரிக்கையில், "இத்தகைய கேசச் சாயங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

அழகுசாதன கம்பனிகளுக்கு மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல்

ஐரோப்பிய அழகுசாதன பயன்பாடுகளுக்கு மனிதக் கொழுப்பு மற்றும் இழையங்களை விற்பனை செய்யும் முகமாக, 60 க்கு மேற்பட்டவர்களை படுகொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் பெருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நால்வரைக் கொண்ட குழுவானது பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை காட்டி அழைத்து வந்து படுகொலை செய்து அவர்களுடைய கொழுப்பை ஒரு லீற்றர் 15,000 டொலர் வீதம் விற்று வந்துள்ளனர்.

இந்த குழுவில் இரு இத்தாலிய நாட்டவர்கள் உள்ளடங்கலாக மேலும் பலர் அங்கத்துவம் வகிப்பதாக தெவிக்கப்படுகிறது.

மேற்படி பிராந்தியத்தில் 60 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போனமைக்கு இக் குழுவினரே பின்னணியிலிருப்பதாக பொலிஸார் தெவித்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரின் கைதையடுத்து தலைநகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அந்த சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் கொழுப்பை உள்ளடக்கிய இரு போத்தல்களையும் படுகொலை செய்யப்பட்ட ஒருவரது உருவப்படத்தையும் காண்பித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தாம் எவ்வாறு ஆட்களை கொன்று அவர்களது கொழுப்பைப் பெற்று விற்பனை செய்தார்கள் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஐரோப்பாவிலிலுள்ள அழகுசாதன மற்றும் மருந்தக கம்பனிகளுக்கு மனிதக் கொழுப்பை விற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேற்படி குற்றச்செயலுடன் தொடர்புடைய ஐரோப்பிய கம்பனிகள் தொடர்பில் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

சந்தேகநபர்களில் முதலாமவர் இம்மாத ஆரம்பத்தில் லிமாவிலுள்ள பஸ் நிலையமொன்றில் மனிதக் கொழுப்புடன் கைது செய்யப்பட்டதையடுத்தே, இந்த சர்வதேச மனிதக் கொழுப்பு கடத்தல் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி குழுவின் தலைவரான ஹிலாறியோ குடனாவும் அவரது உதவியாளர்களும் இத்தகைய படுகொலைகளை பல தசாப்த காலமாக செய்து வருவதாக கைது செய்யப்பட்ட அந்த நபர் தெரிவித்திருந்தார்.

ஜக்ஸனின் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்திய பல் மருத்துவர் தற்கொலை



மறைந்த பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸன் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டைச் சுமத்திய பல் வைத்தியரான ஈவன் சான்ட்லர் (65 வயது) தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது சடலமானது கியூ ஜெர்ஸியிலுள்ள அவரது ஆடம்பர இல்லத்தின் படுக்கையறையில் தலையில் ஒரேயொரு துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டது.
1990 களில் தனது 13 வயது மகன் ஜோர்டி அன்ட்லரை மைக்கேல் ஜக்ஸன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஈவன் சான்ட்லர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து மைக்கேல் ஜக்ஸன் ஜோர்டிக்கு (தற்போது 29 வயது) பல மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை செலுத்த நேர்ந்தது.
இந்நிலையில் ஈவன் சான்ட்லன் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை எனவும் அது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திரத்தில் சிக்குண்டு இழுபட்டுச் சென்ற சிறுவன் பலி

இந்தியா, தமிழ்நாட்டில், வேனில் கட்டி இழுத்துச் சென்ற கலவை இயந்திரத்தில் சிக்கி, சைக்கிளில் சென்ற சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவன் மகனான அரவிந்த் (வயது 14) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி சிறுவன், விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் வீதியில் ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளி வழியாக நேற்று முன்தினம் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வேன் ஒன்று அவரைக் கடந்து சென்றது. வேனுக்குப் பின்னால், கட்டட கலவை செய்யும் இயந்திரம் இணைக்கப்பட்டிருந்தது.

எதிர்பாராவிதமாக, வேனில் இருந்த கொக்கி அரவிந்த்தின் சட்டையில் மாட்டிக்கொண்டது. இதனால், நிலைதடுமாறிய அரவிந்த் சைக்கிளிலிருந்து விழுந்தான். அப்போது கலவை இயந்திரத்தின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, வேன் சாரதி இளங்கோவை கைது செய்தனர்.
தகவலறிந்த சிறுவனின் தந்தை சம்பவ இடத்துக்கு வந்து, "தவமிருந்து பெற்ற ஒரே மகனை நடுரோட்டில் பிணமாக பார்க்கிறேனே'' என்று கூறி அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தலை ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு

பங்களாதேஷைச் சேர்ந்த தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான திறிஸ்னாவும் கிறிஸ்னாவும் 25 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வேறு பிரிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரிலுள்ள றோயல் சிறுவர்கள் மருத்துவமனையில் 16 மருத்துவர்கள் கூட்டிணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மூன்று வயதான இந்த இரு பெண் குழந்தைகளது மூளைகளையும் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.

இந்த அறுவைச் சிகிச்சையின் அடுத்த கட்டமாக மேற்படி குழந்தைகளை சொந்தத் தோல், எலும்புக் கட்டமைப்பு மற்றும் செயற்கைப் பொருட்கள் என்பவற்றைப் பயன்படுத்தி வேறு பிரிக்கும்போது ஏற்பட்ட காய அடையாளங்களை மறைக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன் உயிருக்காகப் போராடிய நிலையில் அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்பட்ட இக்குழந்தைகளுக்கு ஏற்கனவே அநேக ஆரம்பகட்ட அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அறுவைச் சிகிச்சையையடுத்து, இரு குழந்தைகளும் ஆரோக்கியமாகக் காணப்படுவதாக மேற்படி அறுவைச் சிகிச்சைக்கு தலைமைதாங்கிய மருத்துவர் லியோ டொனன் தெரிவித்தார்.