





தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன்,சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 73. பொறியியல் பட்டதாரி... பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பொறியாளராகப் பணியாற்றினார்.
வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கினார்.ஸ்ரீரங்கத்தில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த அவர், சென்னை எம்.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
தமிழ் உரைநடை வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் போலவே சுஜாதாவின் உரைநடையும் ஒரு மைல்கல். "தினமணி கதிர்', "குமுதம்' ஆகிய வெகுஜன பத்திரிகைகள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களை விசிறிகளாக பெற்றவர். அதேசமயம், தீவிரமான சிற்றிதழ்களிலும் தனது படைப்புகளை அளித்து தமிழ் இலக்கியத்துக்கு முக்கிய பங்களித்தவர். குறிப்பாக மூத்த பத்திரிகையாளரும், "தினமணி' முன்னாள் ஆசிரியருமான கஸ்தூரி ரங்கன் நடத்திய கணையாழி சிற்றிதழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைசி பக்கத்தை மிக சுவாரஸ்யமாக எழுதியவர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் அப்பகுதியில் அவர் எழுதியவை அன்றைய இளம் தலைமுறையினரை பெரிதும் கவர்ந்தன.
ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ், ஹாரால்டு ராபின்ஸ் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் மயக்கத்தில் கிடந்த இளம் தலைமுறையை தன் எழுத்தால் தமிழின் பால் ஈர்த்தவர். நவீன தமிழ் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க பல சிறுகதைகளை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு.
70-களில் சிற்றிலக்கிய இளைஞர்கள் குழு ஒன்று தொகுத்த குருஷேத்ரம் தொகுப்பில் வெளியான "தனிமை கொண்டு' என்ற சிறுகதை பின்னாளில் குமுதத்தில் நைலான் கயிறு நாவலாக விரிந்து, அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்தது.
அறிவியல் புனை கதைகள்... அறிவியல் புனை கதைகளை தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. கணேஷ்-வசந்த் என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்த பாத்திரங்களை மையப்படுத்தி கதைகள் எழுதினார்.
அரசர் காலத்தை நவீன காலத்தோடு ஒப்பிட்டு, அவர் எழுதிய சிறுகதைப் தொகுப்பில் நகைச்சுவையும், உண்மைத்தகவல்களும் இழையோடும்.
திரைப்படத் துறையில்... : பொறியாளர், எழுத்தாளர் என தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்தார் சுஜாதா. இதைத் தொடர்ந்து, திரைப்படத் துறையில் கால் பதித்தார். நடிகர் கமலுடன் இணைந்து, விக்ரம் படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் கதை - வசனம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். தான் வசனம் எழுதிய திரைப்படங்களில் தனி பாணியை கையாண்டார் சுஜாதா. நீண்ட வசனம் என்பதை உடைத்து, நறுக்கு தெரித்தாற் போல இரண்டே வரிகளில் வசனம் எழுதினார். இது, அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.
உடல் நலக்குறைவு: பல்வேறு தளங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிய எழுத்தாளர் சுஜாதா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சில நாள்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், புதன்கிழமை இரவு உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு 9 மணிக்கு காலமானார்.
அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், கேசவ பிரசாத், ரங்கா பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஒரு இந்தியச் சிலந்தி மனிதன்
5 days ago


4 comments:
மிகப் பெரிய இழப்பு
நிச்சயமாக கீதா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
ஒரு நல்ல எழுத்தாளரை தமிழ்த்தாய் இழந்தாள். இரண்டு தலைமுறைகளாக தமிழ் படித்தவர்களை தனது வாசகராக தக்கவைத்துக்கொள்ள எவ்வளவு திறமை வேண்டும். அனைத்தும் கொண்டிருந்தவர் சுஜாதா. எனது பதிவிலும் எனக்குத்தெரிந்தாற்போல் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன்.
நல்ல அஞ்சலி நன்பரே..
நிச்சயமாக ஜெயக்குமார்.திரு.சுஜாதா அவர்களது எழுத்துக்களைப் படித்திராத தமிழ் வாசகர்களே இல்லை நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment